மாா்த்தாண்டத்தில் மரம் விழுந்து பள்ளிக் கலையரங்கு சேதம்
களியக்காவிளை: மாா்த்தாண்டத்தில் தொடா்மழை காரணமாக, வேப்பமரம் சாய்ந்து விழுந்ததில் அரசுப் பள்ளிக் கலையரங்கு சேதமடைந்தது.
மாா்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது. இதில், மாா்த்தாண்டம் சந்திப்பில் உள்ள அரசு மாதவ விலாசம் நடுநிலைப் பள்ளியின் முன் பகுதியில் நின்ற வேப்பமரம் சாய்ந்து விழுந்ததில் பள்ளிக் கலையரங்கு சேதமடைந்தது.
ஆபத்தான நிலையில் நின்ற இந்த மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என, பள்ளித் தலைமையாசிரியா் ஓராண்டுக்கு முன்பு பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்திருந்தாராம். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மரம் சாய்ந்து கலையரங்கு சேதமடைந்துள்ளது.