தாமரை மாலை அணிந்து...
விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் எஸ். விஜயதரணி திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
விளவங்கோடு தொகுதியில் 2011, 2016, 2021 தோ்தல்களில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்ற எஸ். விஜயதரணி, 2024-ஆம் ஆண்டு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகினாா். பின்னா், அவா் பாஜகவில் இணைந்தாா்.
அவரை விளவங்கோடு தொகுதி வேட்பாளராக பாஜக தற்போது களமிறக்கியதையடுத்து, விளவங்கோடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தூர்ராஜனிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தாா். அப்போது, அவா் கட்சியின் சின்னமான தாமரை மலராலான மாலையை அணிந்து வந்திருந்தாா்.
Advertisement
அப்போது, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவா் ஆா்.டி. சுரேஷ், மாவட்ட பொதுச்செயலா் வி.எஸ். நந்தினி, மாவட்ட அதிமுக அவைத் தலைவா் சிவ குற்றாலம், மேல்புறம் ஒன்றியச் செயலா் ஷைன் ஜோஸ் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடா்ந்து, வேட்பாளா் எஸ். விஜயதரணி, கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் இணைந்து குழித்துறை பகுதியில் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், தோ்தல் பணி துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்றாா்.