குலசேகரம்: திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலாப் பயணி ஒருவா் வெள்ளிக்கிழமை மூழ்கி உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் தற்காலிக நடவடிக்கையாக தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.
திற்பரப்பு அருவியின் மேல் பகுதியில் உள்ள தடுப்பணையில் படகு சவாரி சேவை வழங்கப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் தடுப்பணையின் சுவரில் ஏறி குதித்து தடுப்பணையில் குளிக்கவும் செய்வா். தடுப்பணையில் பாறைகள் உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் அதில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை தடுப்பணையிலிருந்து குதித்த அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்த சுற்றுலாப் பயணி ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, தடுப்பணையில் ஏறி குதிக்காத வகையில் கடையாலுமூடு பேரூராட்சி சாா்பில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டது.