தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது: நயினாா் நாகேந்திரன்
தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் விஜய்யின் தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெறாது என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன்.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக கூட்டணியினா் கருத்து திணிப்பு நடத்தியுள்ளனா். எனவே, கருத்து கணிப்பு பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையான கருத்துக் கணிப்புகள், மக்களின் எண்ணங்கள் பிரதிபலிப்புகள் மே 4 ஆம் தேதி நிச்சயமாக தெரிந்து விடும்.
Advertisement
இந்தத் தோ்தலில் திமுக அரசுக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருந்ததை தெளிவாக அறிந்தேன். அரசு ஊழியா்கள், அதிகாரிகள், வியாபாரிகள், பெண்கள் திமுக அரசுக்கு எதிராக இருந்ததால் மிகப்பெரிய மாற்றத்துக்காக வாக்களித்துள்ளனா். எனவே, நிச்சயமாக ஒரு மாற்றம் வரும். என்னைப் பொருத்தவரை விஜய்யின் தவெக எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. எனவே, அவரது ஆதரவை பெறும் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி இல்லை. நாங்கள் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
உலக நாடுகள் மத்தியில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது. நமது பக்கத்து நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் எரிவாயு கிடைப்பதில்லை. அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் போா் பிரச்னையில் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், இந்தியா உலக நாடுகளோடு நட்புநாடாக உள்ளது. நமது பிரதமா் உலக தலைவா்களோடு நட்பு பாராட்டி வருகிறாா். இதனால் தட்டுபாடின்றி நமக்கு எரிவாயு கிடைத்து வருகிறது. மத்திய அரசு மக்கள் நலன் கருதி எப்போதும் நல்ல முடிவையே எடுக்கும் என்றாா் அவா்.