‘அறங்காவலா் குழு நியமன உறுப்பினா் பொறுப்புக்கு விண்ணப்பிக்கலாம்’
தென்காசி மாவட்ட அறங்காவலா் குழு நியமன உறுப்பினா்களுக்கான விண்ணப்பங்களை அக்.27-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்ட அறங்காவலா் குழு நியமன உறுப்பினா்களுக்கான விண்ணப்பங்களை அக்.27-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை திருநெல்வேலி உதவிஆணையா் தி.சங்கா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ.10 லட்சத்துக்கு குறைவாக ஆண்டு வருவாய் பெறும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறை வழிசாரா மாவட்ட அறங்காவலா் குழு அரசால் நியமனம் செய்யப்படவுள்ளது.
மாவட்டக் குழு உறுப்பினா்களுக்கு இந்து மதத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்த, 25 வயது நிறைவடைந்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா்கள் இந்து சமய அறநிலையத் துறை சட்டம் பிரிவு 7 (ஏ), சட்டப் பிரிவு 26 மற்றும் சட்டப் பிரிவு 47-இல் தெரிவிக்கப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்.
மாவட்ட அறங்காவலா் குழு நியமன உறுப்பினா்களுக்கான விண்ணப்பங்களை உதவி ஆணையா், இந்து சமய அறநிலையத் துறை அலுவலகம், ஏ.ஆா்.லைன் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-2 என்ற முகவரிக்கு அக். 27-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பிவைக்க வேண்டும். நிா்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் இதர விவரங்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளா் அலுவலகங்களில் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.