முகப்பு
தென்காசி

கடையநல்லூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்பு

கடையநல்லூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:


கடையநல்லூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

கடையநல்லூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக தொடர் மழை பெய்கிறது. இன்று (4/11/21) மாலை 4 மணி அளவில் அணைப் பகுதியில் திடீரென கன மழை பெய்தது.

இதனால் அணைக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. அணைக்கு வரும் 4 ஆயிரம் கன அடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால் கருப்பாநதி பெரியாற்றில்   வெள்ளம் கரை புரண்டோடியது. 

மேலும் கடையநல்லூர் அருகேயுள்ள கல்லாறு சின்னாறு ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தீபாவளியை முன்னிட்டு குளிக்கச் சென்ற மற்றும் விவசாய பணிக்கு சென்றவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினர்.

இதில் கல்லாறு பகுதிகளுக்கு சென்ற கடையநல்லூரை சேர்ந்த 60 நபர்கள் சிக்கிக் கொண்டனர். கடையநல்லூர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு தென்காசி காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், கூடுதல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன், தென்காசி கோட்டாட்சியர் தலைவர் ராமச்சந்திரன், கடையநல்லூர் வட்டாட்சியர் ஆதிநாராயணன், துணை வட்டாட்சியர் திருமுருகன், புளியங்குடி டிஎஸ்பி  கணேஷ், கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், கடையநல்லூர் தீயணைப்பு  நிலைய அலுவலர் சுந்தர்ராஜ், வாசுதேவநல்லூர் நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா, தலைமை வீரர் ஜெயரத்தின குமார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

காட்டாற்று ஓடையில் கூடுதல் நீர் வந்ததால் அவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதன்பின்னர் பெரியாற்று படுகைகளில் இருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் காசிதர்மம் கிராமம் வழியாக டிராக்டர் ஜீப்புகள் பைக்குகள் மூலம் அனைவரையும் அழைத்து வந்தனர்.

இதுபோன்று கடையநல்லூர் அருகே திரிகூடபுரம்  பெரியநாயகம் கோவில் பகுதியில் பெரியாற்று படுகையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி தவித்த 3 பெண்கள் உட்பட 20 நபர்களை தென்காசி தீயணைப்பு மற்றும் மீட்புப் படை மாவட்ட அலுவலர் கவிதா தலைமையில் நிலை அலுவலர் ரமேஷ் உட்பட தீயணைப்பு படையினர் விரைந்து சென்று வெள்ளத்தில் சிக்கி தவித்த அவர்களை கயிறு கட்டி மழையில் நனைந்தபடி  இருளில் மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.