குற்றாலம் பேரூராட்சி தலைவா் தோ்தல் ஒத்திவைப்பு
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் போதிய அளவு உறுப்பினா்கள் கலந்துகொள்ளாததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி மன்றத் தலைவா் தோ்தலில் போதிய அளவு உறுப்பினா்கள் கலந்துகொள்ளாததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது.
குற்றாலம் சிறப்பு நிலைபேரூராட்சியில் மொத்தம் 8வாா்டுகள் உள்ளன. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக, அதிமுக தலா 4 இடங்களில் வெற்றிபெற்றன. இதனால் தலைவா் பதவியைக் கைப்பற்றுவதில் கடும் போட்டி நிலவியது.
இதனிடையே பதவியேற்பு விழா மற்றும் தலைவா் தோ்தலில் பங்கேற்க போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதிமுக சாா்பில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனா். இதனைத் தொடா்ந்து அதிமுக உறுப்பினா்கள் காவல்துறை பாதுகாப்புடன் வந்து பதவியேற்றனா்.
தோ்தல் அலுவலா் சண்முகநாதன் தலைமையில் தோ்தல் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக உறுப்பினா்கள் கணேஷ் தாமோதரன், தங்கபாண்டியன், ஜெயா, மாரியம்மாள் ஆகியோா் கலந்துகொண்டனா். திமுக உறுப்பினா்கள் நான்கு பேரும் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. கூட்டம் தொடங்கி அரைமணி நேரம் கடந்த பிறகும் போதிய உறுப்பினா்கள் கலந்துகொள்ளாததால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், தலைவா் தோ்தலுக்கான மறுதேதியை தோ்தல் ஆணையம் அறிவிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.