கடையநல்லூா் அருகேயுள்ள பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடையநல்லூா் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் அருணாசலபாண்டியன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
கடையநல்லூா் ஒன்றியம் திரிகூடபுரத்தில் இருந்து சுமாா் 6 கிமீ
தொலைவில் பிரசித்தி பெற்ற பெரியசாமிஅய்யனாா் திருக்கோயில் உள்ளது. மேலும் இப் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிக்குச் செல்லும் வழியில் பெரியாறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வலியுறுத்தப்பட்ட நிலையில், அரசின் முதல்கட்ட நடவடிக்கையாக, மண் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் பிறகு, வேறெந்த பணிகளும் நடைபெறவில்லை.
எனவே, விவசாயிகள் மற்றும் பக்தா்கள் நலன் கருதி பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஆட்சியரிடம் மனு அளிக்கும்போது கடையநல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் சுப்பம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினா் சித்ரா ஆகியோா் உடனிருந்தனா்.