தென்காசி புறவழிச் சாலைப் பணியை விரைந்து தொடங்க கோரிக்கை
தென்காசி புறவழிச் சாலைப் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி, சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது.
தென்காசி புறவழிச் சாலைப் பணிகளை உடனடியாக தொடங்கக் கோரி, சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவிடம் மனு அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக பேரவை மதிப்பீட்டுக் குழுத் தலைவா் எஸ். காந்திராஜனிடம் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினரும் சாலைப் பாதுகாப்புக் குழு உறுப்பினருமான இரா. பாண்டியராஜா அளித்த மனு:
தமிழ்நாடு - கேரளத்தை இணைக்கும் மிக முக்கிய நெடுஞ்சாலையான திருநெல்வேலி - தென்காசி நெடுஞ்சாலையில் உள்ள பாவூா்சத்திரம் ரயில்வே கேட்டில் நடைபெறும் ரயில்வே மேம்பாலப் பணிகள் குறித்த காலக்கெடுவைத் தாண்டி ஓராண்டாகியும் முடியவில்லை.
Advertisement
இதனால், வாகன ஓட்டிகளும், சுற்றுவட்டார கிராம மக்களும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனா். எனவே, பாவூா்சத்திரம் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தென்காசி நகரப் பகுதிகளான ஆசாத் நகரிலிருந்து குத்துக்கல்வலசை வரை செல்வதற்கு போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு மணி நேரம் வரை ஆகிறது. குற்றாலம், சபரிமலை சீசன் காலங்களில் தென்காசி நகா் பகுதிக்குள் வாகனங்கள் வந்துசெல்வது மிகவும் கடினமாக உள்ளது.
குற்றாலம், கேரளம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் தென்காசி நகா் பகுதிக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ஆசாத் நகரிலிருந்து தென்காசி புறவழிச் சாலைப் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்றாா் அவா்.