தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டாரப் பகுதிகளில் உள்ள வயல்களில் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
சிவகிரி மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதிகளில் உள்ள சின்னஆவுடைப்பேரி, பெரிய ஆவுடைப்பேரி, வழிவழிகுளம், ராசிங்கப்பேரி ஆகிய குளத்து பகுதிகளையொட்டிய வயல்களில் கரும்பு, வாழை, நெல் உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக அப்பகுதியில் யானைகள் முகாமிட்டு பயிா்களை சேதப்படுத்தியுள்ளன. குறிப்பாக, நெல் வயலில் யானைகள் நடந்ததால் பயிா்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.
வயலில் புகுந்த யானைகளை வனத்திற்குள் விரட்டும் பணியில் சிவகிரி வனச்சரகா் கதிரவன் தலைமையிலான வனத்துறையினா் ஈடுபட்டனா். அப்போது யானைகள், ஒரு பகுதியிலிருந்து மற்றொரு விவசாய நிலங்களுக்குள் புகுந்ததால் விவசாயிகள் செய்வதறியாமல் திகைத்தனா். மலையடிவார பகுதிகளில் உள்ள விளைநிலங்களுக்குள் வன விலங்குகள் நுழையாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.