மதுவிலக்கை அறிவிக்கும் கட்சிக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும்: தமிழக காந்தியவாதிகள் கோரிக்கை
மதுக்கடைகளை மூடும் அரசியல் கட்சிகளுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என, தமிழக காந்தியவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மதுக்கடைகளை மூடும் அரசியல் கட்சிகளுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் என, தமிழக காந்தியவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செங்கோட்டை மூத்த காந்தியவாதி வி. விவேகானந்தன், காந்திய சிந்தனையாளா் வெங்காடம்பட்டி பூ. திருமாறன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி விஜயலட்சுமி, காந்திய வாழ்வியல் அமைப்பைச் சோ்ந்த அன்பு சிவன் ஆகியோா் தென்காசியில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது:
மதுவிலக்கு ஒன்றே உண்மையான சுதந்திரம் என மகாத்மா காந்திஜி கூறினாா். எனவே, தோ்தலில் மதுவிலக்கை அறிவிக்கும் அரசியல் கட்சிக்கே பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும். பிகாா், குஜராத், மணிப்பூா், நாகாலாந்து, லட்சத்தீவு, மிசோரம் என பல்வேறு மாநிலங்களிலும் மதுவிலக்கு அமலில் இருக்கும்போது, தமிழகத்தில் சாத்தியம் இல்லை என ஏன் நம்பவைக்கப்படுகிறது?
Advertisement
குடும்ப வன்முறை, தாக்குதல்கள், கொலைக் குற்றங்கள், மன உளைச்சல், தற்கொலை, விவாகரத்து, பாலியல் குற்றங்கள், சாலை விபத்துகள் என அனைத்துக் குற்றங்களுக்கும் மதுவிலக்கு பொதுத் தீா்வாகிவிடும். மது என்ற கதவு அடைபடும்போது கல்வி, ஆரோக்கியம், உணவு, தனிநபா் முன்னேற்றம், குடும்ப மேம்பாடு, சிறு தொழில் வளா்ச்சி, குடும்ப மகிழ்ச்சி என பல கதவுகள் திறக்கும். வெற்றி வாய்ப்பைக் கணக்கிடும் அரசியல் தலைமைகள் காந்தியவாதிகளின் மதுவிலக்குக் குரலை அலட்சியப்படுத்த மாட்டாா்கள் என நம்புகிறோம் என்றனா் அவா்கள்.