காந்தி ஜயந்தி விடுமுறையில் விதிமுறை மீறல்: 62 நிறுவனங்களுக்கு அபராதம்
திருநெல்வேலி மாவட்டத்தில் காந்தி ஜயந்தி விடுமுறை நாளில்
திருநெல்வேலி மாவட்டத்தில் காந்தி ஜயந்தி விடுமுறை நாளில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 62 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் ஜெ. காளிதாஸ் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
காந்தி ஜயந்தி தேசிய பண்டிகை விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பீடி, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளி க்கப்பட வேண்டும். அன்றைய தினத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியமோ அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுப்போ அளிக்கப்பட வேண்டும். மேலும் அன்று பணிபுரிய விரும்பும் தொழிலாளர்களிடம் சட்டவிதிகளின்படி வரையறுக்கப்பட்ட ஆவணத்தில் அன்னாரின் கையொப்பம் பெற்று ஒரு நகலை நிறுவனத்தின் அறிவிப்பு பலகையிலும், மற்றொரு நகலை 24 மணிநேரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இந்நிலையில் தொழிலாளர் துறை உயர் அதிகாரிகளின் வழிகாட்டுதல்படி திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அனைத்து தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சங்கரன்கோவில், தென்காசி,அம்பாசமுத்திரம், வள்ளியூர் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சிறப்பாய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின்போது உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் தொழிலாளர்களை பணியமர்த்தியது தொடர்பாக 30 கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், 3 பீடி மற்றும் சுருட்டு தயாரிக்கும் நிறுவனங்கள், 25 உணவு நிறுவனங்கள், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு ரூ.19300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.