புதிய கூட்டணி! முதல்முறையாக வடகொரியா சென்றார் பெலாரஸ் அதிபர்!
முதல்முறையாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ வடகொரியா நாட்டுக்குச் சென்றுள்ளது குறித்து...
பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ முதல்முறை அரசு முறைப் பயணமாக வடகொரியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
உக்ரைன் மீதான போரில், வடகொரியா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ரஷியாவுக்காகப் போரில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்பட்ட நிலையில், பெலாரஸ் நாட்டின் ராணுவத் தளங்கள் மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பெலாரஸ் நாட்டின் சர்வாதிகாரியாகக் கருதப்படும் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ புதன்கிழமை (மார்ச் 25) அன்று முதல்முறை அரசு முறைப் பயணமாக வடகொரியா நாட்டுக்குச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அதிபர் லுகாஷென்கோவின் இந்த 2 நாள் பயணத்தில், இருநாடுகளுக்கும் இடையில் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டுறவு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த 2025 செப்டம்பரில் சீனாவில் நடைபெற்ற ராணுவப் பேரணியில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் பெலாரஸ் அதிபர் லுகாஷென்கோ நேரில் சந்தித்து உரையாடினர்.
இத்துடன், மனித உரிமை மீறல் மற்றும் ரஷியாவுக்கு ஆதரவாகச் செயல்படுவது உள்ளிட்ட புகார்களைத் தொடர்ந்து வடகொரியா மற்றும் பெலாரஸ் மீது மேற்குலக நாடுகள் பல தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.