திருநெல்வேலி மாவட்ட மீனவர் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர்தலைமையில் ராதாபுரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம், கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தின் போது கடற்கரை கிராம மீனவர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவேண்டும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து செல்வதை தடுக்கவேண்டும், மானிய விலை மண்ணெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தினர்.
தொடர்ந்து ஆட்சியர் கூறியது: மீனவர்கள் மீதான வழக்குகளின் தன்மைகளை ஆராய்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் கலந்தாய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பிறமாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைபடகு மூலம் மீன்பிடித்து செல்வதை தடுப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் அதிகாரிகளோடு பேசி, குழு அமைத்து நல்ல தீர்வு ஏற்படுத்தப்படும் என்றார் அவர்.
கூட்டத்தில் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆகாஷ், சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, மீன்வளத்துறை உதவி இயக்குநர் வேல்முருகன், இடிந்தகரை மீனவர் சங்க பிரதிநிதி அந்தோணி அமலராஜா, உவரி ரைமண்ட், அந்தோணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.