திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு துறைகள் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.
மாற்றுத்திறனாளி நலத் துறையின் சார்பில் திருநெல்வேலி பார்வையற்றோருக்கான மேல்நிலைப் பள்ளியில் பயின்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவி ராணி முதல்வரின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.20 ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசை ஆட்சியர் வழங்கினார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மூலம் 3 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களும்,ஒருவருக்கு தேய்ப்புப் பெட்டியும், வீரகேரளம்புதூர் வட்டம், சிவகுருநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த 4 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணைகளும், பாளையங்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 2 பேருக்கு முதியோர் உதவித் தொகை பெறுவதற்கான ஆணையும், திருநெல்வேலி வட்டத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத் திறனாளிக்கு உதவித் தொகை பெறுவதற்கான ஆணையும் வழங்கப்பட்டன.
இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம்,கோட்டாட்சியர் மைதிலி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி துணை ஆட்சியர் ஆர்.விஜயலட்சுமி,மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் நிர்மலா,மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சத்தியநாராயணன்,மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை அலுவலர் சாந்திகுளோரி எமரால்ட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.