கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும்: எஸ்.வி.சேகர்
தமிழகத்தில் கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் நடிகர் எஸ்.வி.சேகர்.
தமிழகத்தில் கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றார் நடிகர் எஸ்.வி.சேகர்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
தமிழகத்தில் கோயில் சிலை, நகை திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதைத் தடுக்க கோயில் நிர்வாகப் பொறுப்பை இந்துக்களிடம் ஒப்படைக்க வேண்டும். வரும் தேர்தல் ஆன்மிகத்துக்கும், நாத்திகத்துக்குமானதாக இருக்கும். தமிழகத்தில் இனி தெய்வீக சின்னம் ஜெயிக்கும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆட்சி செய்வதே சிறப்பானதாக இருக்கும்.
யோகாசனம் உடலுக்கு நல்லது என்பதை உணர்ந்தாலும், அதனை பிரதமர் நரேந்திரமோடி சொன்னதால் எதிர்க்கும் மனநிலை பலருக்கும் உருவானது. அதுபோன்றுதான் பல்வேறு பிரச்னைகளிலும் வெளிப்படுத்தப்படுகிறது. இந்து மத பெருமையே நம்பிக்கையை அடிப்படையாக கொண்டதாகும். நம்பிக்கை வைத்தால் அனைத்திலும் வெற்றி பெற முடியும் என்றார் அவர்.
தொடர்ந்து, இந்து தர்ம மேம்பாட்டுக்கான சேவை அமைப்பு சார்பில் இந்து மதத்தின் மகிமைகளையும், ஆன்மிக உன்னதங்களையும் முன்னிறுத்தி இந்துக்களை ஒன்றிணைக்கும் வகையில் நடைபெற்ற கருத்தரங்கில் எஸ்.வி.சேகர் பேசினார். சென்னை வேங்கடகிருஷ்ணன், ஆழ்வார்திருநகரி எம்பெருமானார் ஜீயர் சுவாமிகள், கல்யாண ராமன், ஜெயந்திநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.