பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை வியாழக்கிழமை முதல் (பிப். 15) பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் திருநெல்வேலி மண்டலத் துணை இயக்குநர் சாய்லட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிகழாண்டு மார்ச் - ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்துள்ள தனித் தேர்வர்கள் (தட்கல் உள்பட) வியாழக்கிழமை முதல் WWW.DGE.TN.GOV.IN என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்யலாம். இணையதளத்துக்குச் சென்று முதலில் HALL TICKET DOWNLOAD என்ற வாசகத்தை "க்ளிக்' செய்தால் தோன்றும் பக்கத்தில் SSLC EXAM MARCH/ APRIL 2018- PRIVATE CANDIDATE - HALL TICKET PRINTOUT" என்ற வாசகத்தை "க்ளிக்' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண், பிற்ந்த தேதியைப் பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித் தேர்வர்கள் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாதோர் தேர்வெழுத அனுமதி இல்லை என்றார் அவர்.