மாவட்ட அறிவியல் கண்காட்சி: லிட்டில் பிளவர் பள்ளி முதலிடம்
சங்கர்நகரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அறிவியல் கண்காட்சியில் லிட்டில் பிளவர் பள்ளி முதலிடம் பெற்றது.
சங்கர்நகரில் புதன்கிழமை நடைபெற்ற மாவட்ட அறிவியல் கண்காட்சியில் லிட்டில் பிளவர் பள்ளி முதலிடம் பெற்றது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த சமூக பொறுப்பு-செயல்பாடுகள் திட்டம் சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி, கிராமப்புற 10, 12 ஆம் வகுப்பு சாதனை மாணவர்களுக்கு கல்வி ஊக்கப் பரிசளிப்பு விழா சங்கர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கண்காட்சியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பா. உதயகுமார் தொடங்கிவைத்தார். இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன இணைத் தலைவர் சு. சண்முகம் தலைமை வகித்தார். ஆலையின் பொதுமேலாளர் ச. தெட்சிணாமூர்த்தி, உதவிப் பொதுமேலாளர்கள் இரா. ஏகாம்பரம் (மனிதவளம்), த.சு. பத்னாபன் (கணக்குகள்), இ. கிருஷ்ணன் (சுரங்கம்), தொழிற்சங்க பொதுச்செயலர் எஸ்.கே. சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டம் முழுவதிலிருமிருந்து 35 பள்ளிகள் பங்கேற்றதில், திருநெல்வேலி லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி முதலிடம், தச்சநல்லூர் வேதிக் வித்யாஷ்ரம் பள்ளி 2 ஆவது இடம், அலவந்தான்குளம் அந்தோணியார் உயர்நிலைப் பள்ளி 3 ஆவது இடம் பெற்றன.
வெற்றிபெற்ற பள்ளிகள், கிராமப்புற சாதனை மாணவர்களுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி பரிசுகள் வழங்கிப் பாராட்டியதுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு, மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கினார்.
ஆலை நிர்வாகம் சார்பில் சங்கர்நகர் பேரூராட்சிக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் கொசு ஒழிப்பு புகை அடிக்கும் இயந்திரம், மாணவர்களுக்கு ரூ. 2.28 லட்சம் கல்வி ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை, கோ. கணபதிசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். பள்ளித் தலைமையாசிரியர் உ. கணேசன் வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் ஆ. ரெங்கநாதன் நன்றி கூறினார்.