கல்லூரிப் பேராசிரியர் கொலை: தேசிய ஆதிதிராவிட ஆணையம் விசாரணை
திருநெல்வேலியில் கொலையுண்ட கல்லூரிப் பேராசிரியர் செந்தில்குமாரின் மனைவி, உறவினர்களிடம் தேசிய ஆதிதிராவிட ஆணைய மூத்த அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலியில் கொலையுண்ட கல்லூரிப் பேராசிரியர் செந்தில்குமாரின் மனைவி, உறவினர்களிடம் தேசிய ஆதிதிராவிட ஆணைய மூத்த அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம், கொடியன்குளத்தைச் சேர்ந்த குமார் என்பவரது மகள் அனுஷியா. இவரது கணவர் செந்தில்குமார் (35). திருநெல்வேலியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக வேலைபார்த்துவந்த இவர், பாளையங்கோட்டையில் குடும்பத்துடன் வசித்துவந்தார்.
செந்தில்குமார் கடந்த திங்கள்கிழமை பணிக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் வெடிகுண்டுகளை வீசியதுடன், கத்தியால் செந்தில்குமாரைக் குத்தியதாம். இதில், அவர் இறந்தார்.
நிலம் தொடர்பாக குமாருக்கும், பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாலகணேசன், பாலமுருகன், ராக்கெட் ராஜா ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்ததாகவும், இந்த விவகாரத்தில் குமாரைக் கொல்ல வந்த மர்ம கும்பல் அவரது மருமகனான செந்தில்குமாரைக் கொன்றதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 9 பேர் மீது பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர். அவர்களில், ராஜசேகர், அஸ்வின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில், செந்தில்குமாரின் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்துவந்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்வதாக போலீஸார் உறுதியளித்ததை அடுத்து சடலத்தை உறவினர்கள் புதன்கிழமை பெற்றுக்கொண்டனர்.
இந்நிலையில், தேசிய ஆதிதிராவிட ஆணைய மூத்த விசாரணை அதிகாரிகள் எஸ். லிஸ்டர், ஏ. இனியன் ஆகியோர் செந்தில்குமார் வீட்டுக்கு புதன்கிழமை வந்தனர். அவர்கள் செந்தில்குமாரின் மனைவி அனுஷியா, குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் காவல் துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அரசுத் தரப்பிலிருந்து கிடைக்க வேண்டிய சட்டப்படியான சலுகைகளுக்குப் பரிந்துரைப்பதாக, அவர்கள் செந்தில்குமாரின் குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். மேலும், செந்தில்குமார் கொலை குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்த ஆணைய அதிகாரிகள், விசாரணை அறிக்கை ஆணையத் தலைவருக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்தனர்.
திருநெல்வேலி கோட்டாட்சியர் இல. மைதிலி, மாநகர காவல் உதவி ஆணையர் ச. விஜயகுமார், அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேலும் இருவரிடம் விசாரணை
பாளையங்கோட்டையில் கல்லூரி பேராசிரியர் செந்தில்குமார் கொலை தொடர்பாக, மேலும் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பாளையங்கோட்டை அண்ணாநகரைச் சேர்ந்த செந்தில்குமார் (35). தனியார் கல்லூரி பேராசிரியரான இவர் நிலத்தகராறு தொடர்பான விரோதத்தில் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து 9 பேர் மீது வழக்குப் பதிந்து முக்கிய குற்றவாளிகளை போலீஸார் தேடி வருகின்றனர். இக்கொலையில் ராஜசேகர், அஸ்வின் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, இக்கொலையில் தொடர்பாக மேலும் இருவரை போலீஸார் பிடித்து விசாரிக்கின்றனர்.
நிதி அளிப்பு: இதனிடையே, கொலையுண்ட பேராசிரியரின் குடும்பத்திற்கு, வன்கொடுமையின் கீழ் பாதிக்கப்பட்டோருக்கான நிதி உதவியாக முதல் கட்டமாக ரூ. 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 க்கான காசோலையை, அவரது மனைவியிடம் ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் புதன்கிழமை வழங்கினர்.