முகப்பு
திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் பால்பண்ணை அமைக்க நிதியுதவி

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 சிறிய பால்பண்ணைகள் அமைப்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப்

Updated On : 15 மே, 2018 at 3:49 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

திருநெல்வேலி மாவட்டத்தில் 3 சிறிய பால்பண்ணைகள் அமைப்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசு பால் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ரூ.1.25 கோடி செலவில் சிறிய அளவிலான 100 பால் பண்ணைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்திற்கு மூன்று சிறிய அளவிலான பால்பண்ணைகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்படி மொத்த திட்ட செலவினமாக ரூ.5 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயனாளியின் பங்குத் தொகை 75 சதவீதம் (ரூ.3.75 லட்சம்) ஆகும். மாநில அரசின் பங்குதொகை 25 சதவீதம் ( ரூ.1.25 லட்சம்) ஆகும். பால்பண்ணை தொழிலில் விருப்பமுள்ளவர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.
பயனாளிகள் மாட்டுக்கொட்டகை கட்டுவதற்கு குறைந்தபட்சம் 300 சதுர அடி நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ வைத்திருக்க வேண்டும். தீவனப்புல் வளர்ப்பதற்கு பாசன வசதியுடன் குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகை அடிப்படையிலோ வைத்திருக்க வேண்டும்.
பயனாளி ஏற்கெனவே கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் எந்த திட்டத்திலும் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. தற்சமயம் பயனாளிகள் சொந்தமாக பசு அல்லது எருமைமாடுகள் வைத்திருக்கக் கூடாது.
விண்ணப்பதாரரோ, அவருடைய குடும்பத்தினரோ, உறவினர்களோ மத்திய - மாநில அரசு அல்லது அவை சார்ந்த நிறுவனங்கள், கூட்டுறவு மையங்களில் பயனாளிகளாக இருக்கக் கூடாது. உள்ளூர் அமைப்புகளில் உறுப்பினராக இருக்கக்கூடாது. பயனாளி கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.
30 சதவீத பயனாளிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். மாவட்ட ஆட்சியரால் தேர்வு செய்யப்படும் பயனாளிகள் பட்டியலே இறுதியானது. இந்தப் பயனாளிகள் குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் கால்நடைகளை பராமரிக்க வேண்டும். இல்லையெனில் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மையங்களில் 2 நாள்கள் முறையான பயிற்சி அளிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.