நெல்லையில் 14 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு: 2724 பேர் பங்கேற்பு
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வில் 2724 பேர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வில் 2724 பேர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு திருநெல்வேலி மாவட்டத்தில் 14 மையங்களில் முற்பகல், பிற்பகல் என இரு பிரிவாக நடைபெற்றது. பாளையங்கோட்டையில் கதீட்ரல் மேல்நிலைப் பள்ளி, மேரி சார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய இக்னேஷியஸ் மேல்நிலைப் பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப் பள்ளி, சாராள் தக்கர் பெண் மேல்நிலைப் பள்ளி, மு.ந. அப்துல்ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி, மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, செயின்ட் தாமஸ் பள்ளி, ஆதித்தியா வித்யா நிகேதன் மெட்ரிக் பள்ளி, டி.டி.டி.ஏ. ஜெயராஜ் அன்னபாக்கியம் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற தேர்வை வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலையில் 3 சுற்றுக் குழுவினர் கண்காணித்தனர்.
தேர்வு நடைபெற்ற மையங்களில் தடையின்றி மின்சாரம், மையங்களுக்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாளையங்கோட்டை கிறிஸ்துராஜா பள்ளி மையத்தில் தேர்வினை மாவட்ட வருவாய் அலுவலர் பூ. முத்துராமலிங்கம் பார்வையிட்டார். இத்தேர்வை எழுதுவதற்கு 4135 பேருக்கு அனுமதிச் சீட்டு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில், 2724 பேர் பங்கேற்றனர். 1411 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.