திருநெல்வேலி மாவட்டத்தில் "CSC NELLAI'' என்ற புதிய செல்லிடப்பேசி செயலியை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் திங்கள்கிழமை அறிமுகம் செய்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களின் இருப்பிட விவரங்களை செல்லிடப்பேசி மூலம் அறிந்து கொள்வதற்காக தேசிய தகவலியல் மையம் தயாரித்துள்ள "CSC NELLAI' ” என்ற செல்லிடப்பேசி செயலியை அனைத்து அலுவலர்கள் முன்னிலையில் அறிமுகம் செய்து வைத்து ஆட்சியர் பேசியதாவது:
"CSC NELLAI' என்ற செல்லிடப்பேசி மூலம் பொது சேவை மையங்களின் விவரங்களை அறிந்து கொண்டு எளிதில் தமிழக அரசின் பல்வேறு இ-சேவைகளை எளிதில் பெறலாம்.
இதன்மூலம் நில ஆவணங்களில் பெயர் மாற்றம், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற வருவாய்த் துறையின் 20 இ-சேவைகளுக்கும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு அனாதை பெண் திருமண உதவித் திட்டம் போன்ற சமூக நலத்துறையின் 7 வகையான இ-சேவைகளுக்கும், தீயணைப்புத் துறையின் தடையில்லா சான்று பெறுதல், மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற இ-சேவைகளுக்கும் அருகிலுள்ள பொது சேவை மையங்களின் வழியாக கோரிக்கைகளை அனுப்ப வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் 383 பொது சேவை மையங்கள் செயல்படுகின்றன.எனினும், இந்த சேவை மையங்களின் இருப்பிடம் பொது மக்களுக்குத் தெரியாததால் வீணாக அலைய வேண்டியுள்ளது. அதைத் தவிர்க்கும் விதமாக "CSC NELLAI' என்ற செயலியை மாநிலத்திலேயே முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.
இதன்மூலம் 1 கி.மீ., 5 கி.மீ., 10 கி.மீ., 15 கி.மீ., 20 கி.மீ., 30 கி.மீ. ஆகிய 6 வகையான சுற்றளவில் அமையப் பெற்ற அனைத்து பொது சேவை மையங்களின் இருப்பிடங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் தாங்கள் விரும்பும் மையத்தின் குறியீட்டின் மேல் அழுத்தினால் அதனுடைய முகவரி, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள், தங்கள் இருப்பிடத்திலிருந்து உத்தேச தொலைவு ஆகிய விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், திருநெல்வேலி கோட்டாட்சியர் இல.மைதிலி உள்பட பலர் கலந்துகொண்டனர்.