பாளை.யில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 இலவச மாதிரித் தேர்வு: 110 பேர் பங்கேற்பு
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 இலவச மாதிரித் தேர்வில் 110 பேர் பங்கேற்றனர்.
பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 இலவச மாதிரித் தேர்வில் 110 பேர் பங்கேற்றனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மார்ச் 3ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி திருநெல்வேலி மாவட்ட மைய நூலகம், ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாதெமி, திருநெல்வேலி டான் சிட்டி அரிமா சங்கம் ஆகியவை சார்பில் இலவச மாதிரித் தேர்வு பாளையங்கோட்டை பிபிஎல் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்வை ஓய்வுபெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.
விஞ்ஞானம் பாடத்தில் 110 வினாக்களும், நடப்பு பொது அறிவுப் பிரிவில் 40 வினாக்களும், புத்திக்கூர்மை பிரிவில் 50 வினாக்களும் என மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. அதிக மதிப்பெண் பெற்ற 8 பேருக்கு திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைப் பதிவாளர் கலாதேவி பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். பரிசளிப்பு விழாவில் வாசகர் வட்டத் தலைவர் அ.மரியசூசை, சுழற்கழக நிர்வாகி ஜானகிராம் அந்தோனி, நல்நூலகர் அ.முத்துக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.