நெல்லையில் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம்: அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின; பள்ளிகள் மூடல்
பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை
பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருநெல்வேலியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சங்கரன்கோவில், அம் பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகங்கள், ஆலங்குளம், செங்கோட்டை, தென்காசி, வாசு தேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் ஆகிய இடங் களில் வேலைநிறுத்தப் போராட்டமும், ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நிர்வாகிகள் மார்த்தாண்ட பூபதி, அண்ணாதுரை, முத்துசாமி, முருகானந்தம், எடிசன், மனோகரன் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பார்த்தசாரதி, பாபு செல்வன், சார்லஸ் நீல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் ராஜ்குமார், நாகராஜன், மணிமேகலை ஆகியோர் உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 33 ஆசிரியர் சங்கங்கள், 86 அரசு ஊழியர் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
இது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் கூறுகையில், "தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்' என்றார்.
வெறிச்சோடிய அரசு அலுவலகம்: ஆட்சியர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களைச் சேர்ந்த அலுவலர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. இதனால் அத்தியாவசியப் பணிகள் பாதிக்கப்பட்டன.
பள்ளிகள் மூடல்: இதேபோல் ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றதால், பெரும்பாலான தொடக்கப் பள்ளிகள் மூடப்பட்டன. இது தொடர்பாக மாணவர்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் செய்யவில்லை. இதனால் காலையில் பள்ளிக்கூடத்திற்கு வந்த மாணவர்கள், வாசலில் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு வீடு திரும்பினர். இதேபோல் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கவிருந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் காரணமாக அது தடைபட்டது.
இது தொடர்பாக பெற்றோர்கள் கூறுகையில், "போராட்டத்திற்கு செல்கிறோம் என்றோ, அதனால் நாளை பள்ளிக்கு வர வேண்டாம் என்றோ ஆசிரியர்கள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் வழக்கம்போல் நாங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பினோம். ஆனால் பள்ளிக்கூடம் திறக்கப்படவில்லை. இதனால் நீண்ட நேரம் காத்திருந்துவிட்டு போராட்டம் குறித்து தகவல் கிடைத்த பிறகு எங்கள் பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து வந்தோம். ஆசிரியர்களை நம்பித்தான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். ஆனால் அவர்கள் எவ்வித தகவலும் தெரிவிக்காமல் சென்றது வருத்தமளிக்கிறது' என்றார்.