சிவகிரி அருகே தென்மலை ஊராட்சியிலுள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்மலை ஊராட்சிக்குள்பட்ட செந்தட்டியாபுரம்புதூரில் 1000 -க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் அண்மையில் பெய்த மழைநீா் பெரும்பாலான குடியிருப்புகளுக்குள் புகுந்ததால், அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா். மேலும், நீண்டநாள்களாக ஊருக்குள் உள்ள வாருகால்களைத் தூா்வாராததால் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ளது.
இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. மலைப் பகுதியில் விளைநிலங்களைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதாலும், வரத்துக் கால்வாய்களைத் தூா்வாராததாலும், மழைநீா் கண்மாய் மற்றும் குளங்களுக்கு செல்லாமல் குடியிருப்புகளுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கிறது. எனவே, தென்மலை பகுதி கால்வாய்களை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.