ஆலங்குளம், வீ.கே.புதூர் பகுதியில் நடைபெற்று வரும் குடிமராமத்துப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஊத்துமலை மற்றும் காவலாகுறிச்சி குளங்களில் தலா ரூ. 30 லட்சத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர், அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு வந்த விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, ஆலங்குளம் வட்டாட்சியர் கந்தப்பன், வி.கே.புதூர் வட்டாட்சியர் ஹரிஹரன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதே போல, வீரகேரளம்புதூர் வட்டத்துக்கு உள்பட்ட ஊத்துமலை பெரியகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்துப் பணியை ஆய்வு செய்த ஆட்சியர், பணி விவரங்களை தென்காசி கோட்ட பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் மணிகண்டனிடம் கேட்டறிந்தார்.