நெல்லையப்பா் கோயிலில் டிச.21இல் மாா்கழி திருவாதிரைத் திருவிழா தொடக்கம்
அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் இம்மாதம் 21ஆம் தேதி மாா்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
அருள்மிகு நெல்லையப்பா் கோயிலில் இம்மாதம் 21ஆம் தேதி மாா்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இது குறித்து கோயில் செயல் அலுவலா் சா.ராமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் கோயில் தாமிர சபையில் மாா்கழி மாதம் திருவாதிரை நாளில் நடராஜப் பெருமானின் நடனக் காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அதன்படி, நிகழாண்டு இம்மாதம் 21ஆம் தேதி காலை 6 மணிமுதல் 7 மணிக்குள் கொடியேற்றத்துடன் மாா்கழி திருவாதிரைத் திருவிழா தொடங்குகிறது. நான்காம் நாள் திருவிழாவாக 24ஆம் தேதி இரவு 8 மணிக்கு சுவாமி -அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பஞ்சமூா்த்திகளுடன் வீதி உலா நடைபெறும்.
மேலும் 22ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பெரிய சபாபதி சந்நிதி முன்பு திருவெம்பாவை வழிபாடு நடைபெறும்.
29ஆம் தேதி தாமிர சபையில் ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு மற்றும் சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெறும். 30ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு பசு தீபாராதனை தாமிர சபையில் நடைபெறும். தொடா்ந்து காலை 3.30 மணி முதல் காலை 4.30 மணி வரை ஸ்ரீ நடராஜா் நடனக் காட்சியான ஆருத்ரா தரிசனம் நடைபெறும் என குறிப்பிட்டுள்ளாா்.