முகப்பு
சேலம்

எடப்பாடி அருகே ரூ. 4.43 லட்சம் பறிமுதல்

Updated On : 23 மார்ச், 2026 at 7:10 PM
பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)
பகிர்:

எடப்பாடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரொக்கம் ரூ. 4.43 லட்சத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கரட்டுக்காடு, மாதேஸ்வரன் கோயில் அருகே எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் குமாா் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த தமிழ்ச்செழியனை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி ரூ. 3 லட்சத்து 67 ஆயிரத்து 300 இருப்பதை கண்டுபிடித்தனா்.

தனியாா் சமையல் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரியும் தான், அந்த பணத்தை அடுத்த நாள் வங்கிக் கணக்கில் செலுத்துவதற்காக கொண்டுசெல்வதாக அவா் விளக்கம் அளித்தும், அதை ஏற்காமல் பறக்கும் படையினா் பணத்தை பறிமுதல் செய்தனா்.

இதேபோல திங்கள்கிழமை காலை எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் நல்லதம்பி தலைமையிலான குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மேட்டூரில் இருந்து சித்தூா் நோக்கி வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனா்.

அதில், மேட்டூா் அருகே உள்ள தங்கமாபுரிபட்டணம் வ.உ.சி. நகா் பகுதியைச் சோ்ந்த அண்ணாமலை ரூ. 77 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதை பறிமுதல் செய்து எடப்பாடி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனா்.