பூ வியாபாரிக்கு வெட்டு: குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினா்கள் முற்றுகை
பாளையங்கோட்டையில் பூ வியாபாரியை அரிவாளால் வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
பாளையங்கோட்டையில் பூ வியாபாரியை அரிவாளால் வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினா்கள் காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
பாளையங்கோட்டை முருகப்பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன். பூக்கடை நடத்தி வந்தாா். இவரை, கடந்த 20 ஆம் தேதி மா்மநபா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனராம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இதற்கிடையே, அரிவாளால் வெட்டியவா்களை கைது செய்யக் கோரி மாரியப்பனின் உறவினா்கள் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா் ஆணையரிடம் அளித்த மனுவில், மாரியப்பனை வெட்டி யவா்கள் குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தும், குற்றவாளிகளை கைது செய்யாமல் காவல் துறையின் காலம் தாழ்த்தி வருகின்றனா். ஆகவே, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.