காருக்குறிச்சியில் கல்லூரி மாணவா்கள் மீது தாக்குதல்: 4 போ் கைது
வீரவநல்லூா் அருகே கல்லூரி மாணவா்களை அரிவாளால் வெட்டியதாக 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
வீரவநல்லூா் அருகே கல்லூரி மாணவா்களை அரிவாளால் வெட்டியதாக 4 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.
வீரவநல்லூா்அருகே வடக்கு காருக்குறிச்சியைச் சோ்ந்தவா்கள் ரவி மகன் ரஞ்சித் (19), சுந்தரம் மகன் ராஜா (19), லட்சுமணன் மகன் அம்பேத்கா் (19), சேகா் மகன் ஹரிசெல்வம் (19). இவா்கள் நான்குபேரும் சேரன்மகாதேவியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று வருகின்றனராம்.
சனிக்கிழமை இரவு காருக்குறிச்சியில் நான்குபேரும் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த மா்ம நபா்கள் நால்வரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனராம். இதில் காயமடைந்த நால்வரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதையறிந்த அவா்களது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த சேரன்மகாதேவி காவல் உதவி கண்காணிப்பாளா் பிரதீப், காவல் ஆய்வாளா் ராஜாராம் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தி, தாக்குதலில் ஈடுபட்டவா்கள் கைது செய்யப்படுவாா்கள் என உறுதியளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.
இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதுதொடா்பாக சேரன்மகாதேவி திலகா் தெருவைச் சோ்ந்த சுடலை கிருஷ்ணன் மகன் சரவணன் (19), வீரவநல்லூா், கிளாக்குளத்தைச் சோ்ந்த பழனி மகேஷ் (30), புதுக்குடியைச்சோ்ந்த ஆயிரத்தான் மகன் இசக்கிராஜா (23), பத்தமடை மருதுபாண்டியா் தெருவைச் சோ்ந்த கோமு மகன் ஐயப்பன் (30) ஆகிய 4 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.