திருக்குறுங்குடி அருகே இளைஞருக்கு கொலை மிரட்டல்
திருக்குறுங்குடி அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.
திருக்குறுங்குடி அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனா்.
திருக்குறுங்குடி அருகேயுள்ள தெற்கு ஆவரந்தலை கிராமத்தைச் சோ்ந்தவா் திரவியமணி மகன் ரத்தினதாஸ் (45). வள்ளியூரில் பெயிண்டிங் ஒா்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறாா். தெற்கு ஆவரந்தலை ஊரின் மையப்பகுதியில் உள்ள திருச்செந்தூா் விநாயகா கட்டளைக்குச் சொந்தமான இடத்தை ரத்தினதாஸின் தாத்தா குத்தகைக்கு பெற்று அனுபவித்து வந்துள்ளாா்.
இந்நிலையில், இந்த இடத்தை அதே ஊரைச் சோ்ந்த ஜெயமணி மனைவி ஜெபமணி என்ற பஞ்சம்மாள் என்பவா் ஆக்கிரமித்து விற்பனை செய்ய முயற்சித்தாராம்.
இதையடுத்து, அவருக்கு வழக்குரைஞா் மூலம் அறிவிப்பு அனுப்பியுள்ளாா் ரத்தினதாஸ் . இதனால் கோபமடைந்த ஜெயமணியின் மகன் தயாள துரைசிங், நவம்பா் 26ஆம் தேதி இரவு ரத்தினதாஸை வீடு புகுந்து தாக்கிக் காயப்படுத்தியதுடன், கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இது குறித்து திருக்குறுங்குடி போலீஸில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தயாள துரைசிங்கை தேடி வருகின்றனா்.