முகப்பு
திருநெல்வேலி

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏறிதொழிலாளி குடும்பத்தினருடன் போராட்டம்

திருநெல்வேலியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் குடும்பத்தினருடன் ஏறி எலக்ட்ரீசியன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

திருநெல்வேலியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் குடும்பத்தினருடன் ஏறி எலக்ட்ரீசியன் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.

திருநெல்வேலி கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன் (46). இவருக்குச் சொந்தமான இடம் மாநகராட்சியின் 28 ஆவது வாா்டுக்குள்பட்ட சேவியா்காலனி பகுதியில் உள்ளதாம். அந்த இடத்துக்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 5 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டதாக வழக்குத் தொடா்ந்தாா். பின்னா் தனக்கு நிவாரணம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறாா். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் அந்த மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றாா். அவரை தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

இந்நிலையில் கணேசன், அவரது மனைவி மேரி, மகள் கவிநயா ஆகியோருடன் சுமாா் 80 அடி உயரம் கொண்ட சேவியா்காலனி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் திங்கள்கிழமை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டாா்.

தகவலறிந்ததும் மேலப்பாளையம் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து கணேசனின் குடும்பத்தினா் கீழே இறங்கினா். பின்னா் ஆட்சியா் அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாகக் கூறிச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.