நெல்லையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறி தொழிலாளி தனது குடும்பத்தினருடன் போராட்டம்
திருநெல்வேலியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் எலக்ட்ரீஷியன் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருநெல்வேலியில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் எலக்ட்ரீஷியன் தனது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி கணேசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் (46). இவருக்குச் சொந்தமான இடம் மாநகராட்சியின் 28 ஆவது வார்டுக்குள்பட்ட சேவியர்காலனி பகுதியில் உள்ளதாம்.
அந்த இடத்திற்கு போலியான ஆவணங்களைத் தயாரித்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டதாக வழக்குத் தொடர்ந்தார்.
பின்னர் தனக்கு நிவாரணம் வழங்கக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேசன் அந்த மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் ஏறி தற்கொலைக்கு முயன்றார்.
அவரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இந்நிலையில் கணேசன், அவரது மனைவி மேரி, மகள் கவிநயா ஆகியோருடன் சுமார் 80 அடி உயரம் கொண்ட சேவியர்காலனி மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் திங்கள்கிழமை ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்ததும் மேலப்பாளையம் காவல்துறையினரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்களும் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து கணேசனின் குடும்பத்தினர் கீழே இறங்கினர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் தங்களது குடும்ப அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை ஒப்படைக்க உள்ளதாகக் கூறிச் சென்றனர்.