அம்பை, விகேபுரத்தில் நலத்திட்டப் பணிகள்: முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ ஆய்வு
அம்பை, விகேபுரத்தில் நலத்திட்டப் பணிகளை முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ. இன்று ஆய்வு செய்தார்.
அம்பாசமுத்திரத்தில் அமைக்கப்பட்டு வரும் அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் பாபநாசம் கோயில் வெளி பிரகாரத்தில் அமைக்கப்பட்டு வரும் ஹாலோ ப்ளாக் பதிக்கும் பணிகளை முருகையாபாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் கிராமத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றும் வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகள் 2018ஆம் ஆண்டு நவம்பரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 44 கோடி மதிப்பீட்டில் 480 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகளை திங்கள்கிழமை அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் முருகையாபாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, குடிசைமாற்று வாரியத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம் ஆகிய இரண்டு இடங்களில் 44 கோடி ரூபாய் மதிப்பில் 480 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. குடிநீர் மற்றும் மின்சார இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததும் முதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து நவம்பர் முதல்வாரத்தில் திறப்பு விழா நடைபெறும் என்றார். மேலும், பாபநாசம் சிவன் கோயில் வெளிபிரகாரத்தில் ஹாலோ ப்ளாக் செங்கல்கள் பதிக்கும் பணி மற்றும் கோயிலிலிருந்து தலையணை செல்லும் பாதையில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது செயற்பொறியாளர் மாடசாமி, பாபநாசம் கோயில் ஜெகந்நாதன் செயல் அலுவலர், கணக்கர் செந்தில், அதிமுக ஒன்றியச் செயலர் விஜயபாலாஜி, நகரச் செயலர்கள் அறிவழகன், கண்ணன், ஒன்றிய துணைச் செயலர் ப்ராங்க்ளின், நகர இளைஞரணி செயலர்கள் துர்கைபாபு, அருண், இளைஞர் பேரவை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.