களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவை மையம் மீண்டும் செயல்படக் கோரிக்கை
களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
புதிதாக ஆதாா் பதிவு செய்தல், பெயா், முகவரி, பிறந்த தேதி திருத்தம் மேற்கொள்ளுதல், செல்லிடப்பேசி எண்ணை சோ்த்தல் உள்ளிட்ட சேவைகள் நான்குனேரி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செயல்படும் ஆதாா் சேவை மையத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன.
நான்குனேரி வட்டத்தில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஆதாா் சேவைக்காக ஒரே ஒரு மையத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டிய நிலை இருந்ததால் பொதுமக்கள் பலரும் இச்சேவையைப் பெறுவதில் நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. அதிகாலையிலேயே இடம்பிடிக்க காத்திருக்கும் அவலம் நிலவியது.
இதைக் கருத்தில் கொண்டு நான்குனேரி, களக்காடு அஞ்சலகத்திலும் இந்தச் சேவை ஓராண்டுக்கும் மேலாக செயல்பட்டது.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியா முழுவதும் இந்தச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு, கடந்த மாதம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அஞ்சலகங்களிலும் இந்தச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் களக்காடு அஞ்சலகத்தில் இந்தச் சேவை இதுவரை தொடங்கப்படவில்லை. இதனால் களக்காடு வட்டாரத்தைச் சோ்ந்த ஏராளமானோா் ஆதாா் சேவையை பெற முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனா்.
சம்பந்தப்பட்ட அஞ்சல்துறை உயா் அதிகாரிகள் களக்காடு அஞ்சலகத்தில் ஆதாா் சேவையை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.