பாளையங்கோட்டையில் விபத்து: பால் வியாபாரி பலி
பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த பால் வியாபாரி பலியானார்.
பாளையங்கோட்டையில் திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த பால் வியாபாரி பலியானார்.
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே உள்ள நெல்லை திருத்து கிராமத்தைச் சேர்ந்தவர் பால்சாமி ( 47). இவர் திருநெல்வேலி மாநகர பகுதிகளான கேடிசி நகர், டார்லிங் நகர், சாந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தினமும் காலை மாலை வேளைகளில் பால் விநியோகம் செய்வது வழக்கம்.
அதன்படி திங்கள்கிழமை காலையில் தனது கிராமத்திலிருந்து பாலை எடுத்துக்கொண்டு கேடிசி நகர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். பாளையங்கோட்டை ரஹ்மத் நகர் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இதில் படுகாயமடைந்த பால்சாமி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்ததும் திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் பால் சாமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகிறார்கள்.