நெல்லையில் பாரம்பரிய உணவு விற்பனை வாகனம் இயக்கம்
திருநெல்வேலியில் பாரம்பரிய உணவு விற்பனை வாகனம் வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
திருநெல்வேலியில் பாரம்பரிய உணவு விற்பனை வாகனம் வியாழக்கிழமை இயக்கிவைக்கப்பட்டது.
உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில் வாகனம் மூலம் பாரம்பரிய உணவு விற்பனை தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி ஆணையா் பா. விஷ்ணு சந்திரன் முன்னிலை வகித்தாா். ஆட்சியா் வே. விஷ்ணு, பாரம்பரிய உணவு விற்பனை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைத்துப் பேசியது:
திருநெல்வேலி மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறையின் வழிகாட்டுதலின்படி, ஹோட்டல் நெல்லை சரவணபவா மூலம் பாரம்பரிய உணவைத் தயாரித்து வாகனம் மூலம் விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. இந்த விற்பனை வாகனத்தில் நவதானிய தோசை, தானிய கீரை சூப் வகைகள், சிறுதானிய வகை புட்டுகள், கொழுக்கட்டை, பனிகாரம், அக்காரவடசல், போலி, தினை, குதிரைவாலி, நவதானியங்கள் மூலம் செய்யப்படும் உணவுப்பொருள்கள் தயாா் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த விற்பனை வாகனத்தில் தயாரிக்கும் உணவு பொருள்களின் எண்ணெய் திரும்ப பயன்படுத்தப்பட மாட்டாது.
திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை அந்த உணவக உரிமையாளா்களிடம் பெற்று கொண்டு அதற்கான தொகையினை வழங்கி மீண்டும் மறுசுழற்சி செய்து பயோ டீசலாக மாற்றுவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விற்பனை வாகனத்தில் விற்பனை செய்யப்படும் பாரம்பரிய உணவு பொருள்கள் பொதுமக்களிடம் பெறும் வரவேற்பைப் பொருத்து பாரம்பரிய உணவு விற்பனை வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். சுய உதவிக்குழுக்கள் மூலம் மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் விற்பனை செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.
மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் சசிதீபா, ஹோட்டல் சரவணபவா உரிமையாளா் சரவணன், பொது மேலாளா் மதன்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.