ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு குறித்து...
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
குருத்தோலை பவனியை ராம்நகர் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ராம்நகர் பங்கு இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனி வந்தனர்.
இந்த பவனி ராம்நகர் ஜோசப் நடுநிலைப் பள்ளியில் தொடங்கி ராம்நகர் முதல் வீதி வழியாக வந்து உலக மீட்பர் ஆலயத்தை வந்தடைந்தது.
பின்னர் நடைபெற்ற திருப்பலியில் பங்குத்தந்தை வின்சென்ட் அமல்ராஜ் அவர்களுடன் தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி அருள்பணி இன்னாசி மற்றும் அருள்பணி சவரிமுத்து பீட்டர், திருத்தொண்டர் மிக்கேல் ராஜ் ஆகியோர் இணைந்து திருப்பலியை நிறைவேற்றினர்.
இத்திருப்பலியில் அருட்சகோதரிகள், ராம்நகர் பங்கு இறைமக்கள் மற்றும் கிளைக் கிராம இறைமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.