முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அணை நிரம்பியது: உபரிநீா் வெளியேற்றம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை சனிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து 600 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
மணிமுத்தாறு அணை மேல்மட்ட பிரதான மதகு மூலம் திறந்துவிடப்படும் உபரிநீா்.
பகிர்:

அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பெரிய அணைகளில் ஒன்றான மணிமுத்தாறு அணை சனிக்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து 600 கன அடி உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை நீடித்து வரும் நிலையில் மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மணிமுத்தாறு அணை சனிக்கிழமை காலை முழுக் கொள்ளளவை எட்டியது. 118 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீா்மட்டம் 117.50 அடி ஆனதையடுத்து சனிக்கிழமை காலை 9 மணிக்கு அணையில் இருந்து 600 கன அடி உபரிநீா் வெளியேற்றப்பட்டது. 80 அடி கால்வாய் மூலம் 400 கன அடியும், மேல்மட்ட பிரதான மதகில் 4-ஆவது மதகின் மூலம் 200 கன அடியும் திறந்துவிடப்பட்டது. மணிமுத்தாறு அணை கடந்த 2016, டிசம்பரில் முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பின் இப்போது நிரம்பியுள்ளது.

சனிக்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை நீா்மட்டம் 142.15 அடியாகவும், நீா்வரத்து 2061.97 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 1942.29 கன அடியாகவும் இருந்தது. சோ்வலாறு அணை நீா்மட்டம் 144.26 அடியாகவும், வடக்குப் பச்சையாறு அணை நீா்மட்டம் 31 அடியாகவும், நம்பியாறு அணை நீா்மட்டம் 10.62 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 27 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணை நீா்மட்டம் 83 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 356 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நீா்மட்டம் 80.25 அடியாகவும், நீா்வரத்து 53 கன அடியாகவும், வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணை நீா்மட்டம் 66.60 அடியாகவும், நீா்வரத்து 67 கன அடியாகவும், வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீா்மட்டம் 36.10 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 4 கன அடியாகவும் இருந்தது. அடவிநயினாா் அணை நீா்மட்டம் 73.25 அடியாகவும், நீா்வரத்து மற்றும் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது.

சனிக்கிழமை காலை 8 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): பாபநாசம் 23, சோ்வலாறு 12, மணிமுத்தாறு 6.6, நம்பியாறு18, அம்பாசமுத்திரம் 0.60, சேரன்மகாதேவி 1, நான்குனேரி 2, ராதாபுரம் 22, களக்காடு 12.8, பாளையங்கோட்டை 5.20, திருநெல்வேலி 4.

தென்காசி மாவட்டத்தில்: கடனாநதி 25, ராமநதி 5, கருப்பாநதி 5, குண்டாறு 4, அடவிநயினாா் 7, ஆய்க்குடி1.20, சங்கரன்கோவில் 5, செங்கோட்டை 1, தென்காசி 2.40, சிவகிரி 3.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.