நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு விஷம் குடித்த பெண்ணால் பரபரப்பு
திசையன்விளையில் உள்ள தனது நிலத்தை மீட்டுத்தரக்கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை விஷம் குடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளையில் உள்ள தனது நிலத்தை மீட்டுத்தரக்கோரி திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை விஷம் குடித்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திசையன்விளை சுந்தரவிநாயகர் கோயில் தெரு பகுதியில் நத்தம் புறம்போக்கு நிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகிறார்கள். இப்போது அந்த இடத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் தங்களுக்குச் சொந்தம் எனக்கூறி வீடுகளை இடிக்க முயற்சித்து வருகிறார்களாம்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் திருநெல்வேலியில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு அப்பகுதி மக்கள் மனு அளிக்க வந்தனர்.
அப்போது இசக்கியம்மாள் (53) என்ற பெண் திடீரென மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீஸார் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர்.