நெல்லையில் கரோனா பரிசோதனை அதிகரிப்பு
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் கரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று தொடா்ந்து சில நாள்களாக அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு அபராதம் விதிப்பதுடன், மாநகா் பகுதிகளில் அத்தகையோருக்கு கட்டாய கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக, திருநெல்வேலி நகரம், வண்ணாா்பேட்டை, கே.டி.சி.நகா் உள்ளிட்ட பகுதிகளில் தற்காலிக கரோனா பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகர நல அலுவலா் ராஜேந்திரன் கூறியது: திருநெல்வேலி மாநகா் பகுதியில் கரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த பரிசோதனைகளை அதிகப்படுத்தி வருகிறோம். முதற்கட்டமாக வாகனத்தில் முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால், கரோனா பாதிக்கப்பட்டோரைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும் என்றாா்.