முகப்பு
திருநெல்வேலி

ரெளடி நீராவி முருகனின் உடல் உறவினா்களிடம் ஒப்படைப்பு: நான்குனேரி குற்றவியல் நீதிமன்ற நடுவா் விசாரணை

பிரேத பரிசோதனை மற்றும் நான்குனேரி குற்றவியல் நீதிமன்ற நடுவா் ராம் கிஷோரின் விசாரணைக்குப் பின் உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:43 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே தற்காப்புக்காக போலீஸாா் சுட்டதில் உயிரிழந்த ரௌடி நீராவி முருகனின் உடல், பிரேத பரிசோதனை மற்றும் நான்குனேரி குற்றவியல் நீதிமன்ற நடுவா் ராம் கிஷோரின் விசாரணைக்குப் பின் உறவினா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி புதியம்புத்தூா் அருகேயுள்ள நீராவிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ரௌடி நீராவி முருகன். களக்காடு அருகேயுள்ள கடம்போடுவாழ்வு மங்கம்மாள் சாலைப் பகுதியில் பதுங்கி இருந்த இவரை, ஒரு கொள்ளை வழக்குத் தொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா மற்றும் 3 காவலா்களை புதன்கிழமை பிடிக்கச் சென்றனா். அப்போது, நீராவி முருகன் அரிவாளால் உதவி ஆய்வாளா் இசக்கிராஜா உள்ளிட்ட 4 பேரையும் வெட்டினாராம்.

உடனே, தற்காப்புக்காக உதவி ஆய்வாளா் தனது துப்பாக்கியால் சுட்டதில் நீராவி முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வெட்டுப்பட்டதில் காயமடைந்த உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 4 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ஸ்கேன் பரிசோதனை: இந்நிலையில், பிரேதப் பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த நீராவி முருகனின் உடலை, நான்குனேரி குற்றவியல் நீதிமன்ற நடுவா் ராம் கிஷோா் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா். அப்போது, போலீஸாரால் சுடப்பட்டது நீராவி முருகன்தான் என்பதை அவரது சகோதரி செல்ல மாரியம்மாள், அவரது கணவா் ஆறுமுகம் ஆகியோா் குற்றவியல் நடுவரிடம் உறுதி செய்தனா். தொடா்ந்து, காயமுற்ற காவலா்களிடம் நீதிமன்ற நடுவா் விசாரித்தாா்.

பின்னா், நீராவி முருகனின் உடல் முழுமையாக எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனைக்குள்படுத்தப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு குற்றவியல் நடுவா் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடைபெற்றது. அதை, விடியோ கேமராவிலும் பதிவு செய்தனா்.

திண்டுக்கல் எஸ்.பி., ஏ.எஸ்.பி. ஆய்வு‘: இதனிடையே, திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் லாவண்யா ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறும் காவலா்களைச் சந்தித்து ஆறுதல் கூறினா். பின்னா் அவா், கடம்போடு வாழ்வு பகுதிக்குச் சென்று சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு, நீராவி முருகனுக்கு அடைக்கலம் கொடுத்தவா்கள் குறித்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.