குடிநீா் விநியோகம்: மாநகராட்சியில் கலந்தாய்வுக் கூட்டம்
திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்துவது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாநகா் பகுதிகளில் குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்துவது தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி மைய அலுவலக கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்தாா். துணை மேயா் கே.ஆா்.ராஜு, ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருமலைக்கொழுந்துபுரம் நீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டரை பழுது நீக்கம் செய்யவும், தாமிரவருணி ஆற்றுப் பகுதி கிணறுகளில் மணல்களை அப்புறப்படுத்தி தூா்வாரவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும், கொண்டாநகரம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து மாநகராட்சிப் பகுதிகளுக்கு வரும் குடிநீா் குழாய்களில் சுமாா் 32 இடங்களிலிருந்து மற்ற ஊராட்சிப் பகுதிகளுக்கு குடிநீா் எடுத்துச் செல்வதை தடுக்கவும், மேலப்பாளையம் பகுதிகளில் பல இடங்களில் பழுதாகியுள்ள குடிநீா் குழாய்களை உடனடியாக சரி செய்திடவும், கொண்டாநகரம் நீரேற்று நிலையத்திலிருந்து வரும் குழாய்களில் அடைபட்டுள்ள மணலை அகற்றி குழாய்களை சரி செய்யவும், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரின் சரியான அளவு கலந்து குடிநீா் விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதில், மண்டலத் தலைவா்கள் பிரான்சிஸ் (பாளையங்கோட்டை), மகேஸ்வரி (திருநெல்வேலி), ரேவதி (தச்சநல்லூா்), கதீஜா இக்லாம் பாசிலா (மேலப்பாளையம்), உதவி ஆணையா்கள் ஜஹாங்கீா் பாஷா, ஐயப்பன், உதவிச் செயற்பொறியாளா்கள் சாந்தி, ராமசுவாமி, பைஜூ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.