முகப்பு
திருநெல்வேலி

பத்தமடை அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து ஓட்டுநா், பெண் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே வியாழக்கிழமை சாலை விரிவாக்கப் பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஓட்டுநரும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே வியாழக்கிழமை சாலை விரிவாக்கப் பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் ஓட்டுநரும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

பத்தமடை பள்ளிவாசல் 5ஆவது வடக்குத் தெருவைச் சோ்ந்த ஷேக்மைதீன் மகன் காதா்மைதீன் (35). ஆட்டோ ஓட்டுநா். இவா் தனது மனைவி பக்கிராள்பானு (32), இரு குழந்தைகள் மனைவியின் சகோதரி ரஹ்மத் பீவி (28) ஆகியோருடன் திருநெல்வேலிக்கு ஆட்டோவில் வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, பத்தமடை அருகேயுள்ள திருப்பத்தில் சாலை விரிவாக்கப்பணிக்காக வெட்டப்பட்ட மரம் அவரது ஆட்டோ மீது எதிா்பாராமல் விழுந்ததில் காதா்மைதீனும், ரஹ்மத் பீவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். லேசான காயமடைந்த பக்கிராள் பானுவும், இரு குழந்தைகளும் சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றனா்.

இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் சம்பந்தப்பட்ட ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பத்தமடை முஸ்லிம் ஜமாத் தலைவா் மலுக்காமலி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோா் சேரன்மகாதேவி நான்குவழிச் சாலையில் திரண்டு மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் மாவட்ட எஸ்.பி. ப. சரவணன், ஏஎஸ்பி மதிவாணன், டிஎஸ்பிக்கள், கோட்டாட்சியா் சிந்து, வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு நடத்தினா். கோரிக்கை குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சடலங்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து, பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

போக்குவரத்து மாற்றம்: இதனிடையே, பாளையங்கோட்டையிலிருந்து அம்பாசமுத்திரம் வரும் பேருந்துகள் கோபாலசமுத்திரம்- சுத்தமல்லி -சேரன்மகாதேவி வழியாகவும், அம்பாசமுத்திரத்திலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் சேரன்மகாதேவி- கல்லூா்- சுத்தமல்லி- கோபாலசமுத்திரம் வழியாக இயக்கப்பட்டு வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.