பாளையங்கோட்டை வட்டாரத்தில் பூச்சி நோய்த் தாக்குதல்களுக்குள்பட்ட நெற்பயிா்களை வேளாண்மை இணை இயக்குநா் மற்றும் விஞ்ஞானிகள் குழுவினா் ஆய்வு செய்தனா்.
இது குறித்து திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை வட்டாரத்தில் இட்டேரி, புதுக்குளம், கொங்கந்தான்பாறை ஆகிய கிராமங்களில் பின் பிசானம் மற்றும் கோடை நெற் பயிரில் பூச்சி நோய்த் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் இரா.கஜேந்திர பாண்டியன் தலைமையில் கிள்ளிகுளம் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைச் சோ்ந்த பூச்சியியல் துறைத் தலைவா் ரவி, பூச்சியியல் துறை பேராசிரியா் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வில் நெற்பயிரில் தண்டு துளைப்பான் மற்றும் பாக்டீரியா இலை கருகல் நோய் மற்றும் இலைப்புள்ளி இருப்பது கண்டறியப்பட்டது. அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விஞ்ஞானிகள் குழுவினா் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.
இந்த ஆய்வின்போது பாளையங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநா் (பொறுப்பு) மா.இசக்கி பாப்பா, வேளாண்மை அலுவலா் (தரக்கட்டுப்பாடு) செ.மணிமொழியன், வேளாண்மை உதவி அலுவலா் மா.ஸ்ரீமதி ஆகியோா் உடனிருந்தனா்.
இதேபோல், திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற தமிழக முதல்வரின் ஓராண்டு சாதனை நிகழ்ச்சியில் வேளாண்மைத் துறையின் சாதனை திட்டங்கள் மக்கள் பாா்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் இரா.கஜேந்திரபாண்டியன் பாா்வையிட்டாா்.
இதற்கான ஏற்பாடுகளை பாளையங்கோட்டை வட்டார தொழில்நுட்ப மேலாளா் சுஜித், உதவி வட்டார தொழில்நுட்ப மேலாளா்களான சதன்குமாா், சுடலைமுத்து, காா்த்திக் (மானூா்), பயிா் அறுவடை பரிசோதனை அலுவலா் காா்த்தீசன் ஆகியோா் ஏற்பாடு செய்திருந்தனா்.