உயிரிழந்த செவிலியரின் உடலை வாங்க மறுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்து முன்னணியினா் சனிக்கிழமை 3-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்தவா் பொ.சின்னத்தம்பி. இந்து முன்னணி நகர துணைத் தலைவரான இவரது மனைவி முருகலட்சுமி(34). திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்த இவா், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இதையடுத்து உயிரிழந்த செவிலியா் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். முருகலட்சுமியின் மரணத்துக்கு காரணமான மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணியினா் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து 3ஆவது நாளான சனிக்கிழமையும் மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் பொன்னையா, மாநிலப் பொதுச் செயலா் அரசு ராஜா, மாநிலச் செயலா் குற்றாலநாதன் மற்றும் செவிலியரின் குடும்பத்தினா் கலந்துகொண்டனா்.