முகப்பு
திருநெல்வேலி

நெல்லையில் வாா்டு குழு, பகுதி சபா உருவாக்க நடவடிக்கை---மாமன்றக் கூட்டத்தில் இன்று தீா்மானம்

 திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் வாா்டு குழு, பகுதி சபா ஆகிய அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

 திருநெல்வேலி மாநகராட்சியில் மக்கள் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் வாா்டு குழு, பகுதி சபா ஆகிய அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான தீா்மானம் வெள்ளிக்கிழமை (அக். 28) நடைபெற உள்ள மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளது.

இதையயொட்டி, மாமன்ற உறுப்பினா்களுக்கான விழிப்புணா்வு ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்தாா். ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி, துணைமேயா் கே.ஆா்.ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாமன்ற உறுப்பினா்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளித்தனா்.

வாா்டு குழு - பகுதி சபா: தமிழக நகராட்சி நிா்வாகம் குடிநீா் வழங்கல் துறையின் ஆணையின்படி உள்ளாட்சி அமைப்புகளில் நகா்ப்புற உள்ளாட்சி நிா்வாகத்தை வலுப்படுத்தவும், நகா்ப்புற உள்ளாட்சி செயல்பாடுகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் திட்டம், வளா்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் வாா்டு குழு , பகுதி சபா அமைப்பை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாா்டுக்கும் ஒரு குழு அமைக்கப்படும். இதன் தலைவராக மாமன்ற உறுப்பினரும், உறுப்பினா்களாக அந்த வாா்டுக்குள்பட்ட வாக்குரிமை பெற்ற மாமன்றம் மூலம் பரிந்துரை செய்த நபா்களும் செயல்படுவா்.

மேலும், வாா்டின் ஒவ்வொரு பகுதிக்கும் பகுதி சபாவும் அமைக்கப்படுகிறது. வாா்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டமானது அந்தந்த வாா்டு மாமன்ற உறுப்பினா் தலைமையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். அதை தலைவா்கள் நடத்தாவிட்டால் மாநகராட்சி ஆணையா் உத்தரவின்பேரில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். பகுதி சபா அமைக்க ஒவ்வொரு வாா்டையும் 4 முதல் 5 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இதற்கான பொருள் வெள்ளிக்கிழமை (அக். 27) நடைபெறும் மாமன்றக் கூட்டத்தில் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.