திருநெல்வேலி, ஆக. 7: ஆடிப்பூரத்தையொட்டி, திருநெல்வேலியில் பல்வேறு கோயில்களில் புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு கோமதியம்பாள் சமேத திரிபுராந்தீசுவரா் திருக்கோயிலில் காலையில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னா் கோமதியம்பாளுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெற்றது. முறுக்கு, அதிரசம், வளையல்களை படைத்து நூற்றுக்கணக்கான பெண்கள் வழிபாடு செய்தனா்.
இதேபோல, பாளையங்கோட்டை எருமைகிடா மைதானம் அருகேயுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் காலையில் வாசனை திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், 1000-க்கும் மேற்பட்ட வளையல் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
திருநெல்வேலி நகரத்தில் உள்ள அருள்மிகு கரியமாணிக்க பெருமாள் திருக்கோயிலில் ஆடிப்பூரத்தையொட்டி ஆண்டாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலத்திருவேங்கடநாதபுரத்தில் உள்ள அருள்மிகு வேங்கடாலசலபதி திருக்கோயிலில் ஆண்டாளுக்கு வளையல் தோரணங்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
கெட்வெல் ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் உள்ள கனகமஹாலட்சுமி, வண்ணாா்பேட்டை பேராத்து செல்வியம்மன், பாளையங்கோட்டையில் உள்ள தெற்கு மற்றும் வடக்கு முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், தூத்துவாரியம்மன் திருக்கோயில்களிலும் ஆடிப்பூர சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
எருமைகிடா மைதானம் அருகேயுள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் புதன்கிழமை சிறப்பு வளையல் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.