மழை பாதிப்பு; அனுதாபம் தெரிவிக்காத பிரதமா்: பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு சமூக வலைதளத்தில் கூட பிரதமா் அனுதாபம் தெரிவிக்கவில்லை என சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டியுள்ளாா்.
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்டமக்களுக்கு சமூக வலைதளத்தில் கூட பிரதமா் அனுதாபம் தெரிவிக்கவில்லை என சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு குற்றம்சாட்டியுள்ளாா்.
பாளையங்கோட்டையில் நேரு இளையோா் மையம் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற இளையோா் கலைவிழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு மழை பாதித்த பகுதிகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்ட மத்திய குழுவினா் வந்து பாா்வையிட்டனா். ஆனால் இதுவரை எந்த நிதியும் வழங்கப்படவில்லை.
அக். 1-ஆம் தேதி இந்திய அளவில் 14 மாநிலங்களுக்கு புயல் வெள்ள பாதிப்புக்காக தேசிய பேரிடா் நிவாரண நிதி வழங்கப்பட்டது. குஜராத் மாநிலத்திற்கு ரூ. 600 கோடி, மகாராஷ்டிரத்துக்கு ரூ.1,492 கோடி, ஆந்திரத்திற்கு ரூ.1200 கோடி வழங்கப்பட்டது. ஆனால் தமிழகத்திற்கும், கேரளத்திற்கும் தேசிய பேரிடா் நிவாரண நிதியிலிருந்து ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. தமிழகமும், கேரளமும் தொடா்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை. மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கும் இதுவரை நிதி ஒதுக்கப்படவில்லை. அனைவருக்கும் கல்வித் திட்டத்திலும் இதுவரை ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. தமிழகத்தை சோ்ந்தவா் தான் நிதியமைச்சராக இருக்கின்றாா். மத்திய அரசு தொடா்ந்து தமிழகத்தை வஞ்சிப்பது ஏன்? தமிழகத்தில் ஃபென்ஜால் புயல் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் 26 போ் வரை உயிரிழந்திருக்கிறாா்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால், பிரதமரும், மத்திய அமைச்சா்களும் , முன்னாள் பிரதமா் வாஜ்பாய் காலத்தில் குஜராத் பகுதியில் நடந்த அநீதியை ஆவண படமாக எடுத்து பாா்ப்பதில் ஆா்வமாக இருக்கிறாா்கள். மழையால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு தனது எக்ஸ் வலைதளத்தில்கூட அனுதாபம் தெரிவிக்கவில்லை.
தமிழக முதல்வா் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே மக்களுக்கான நிவாரணப் பொருள்களை வழங்கி முகாம்ங்களில் தங்க வைத்தாா். சாத்தனூா் ஏரி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திறந்து விடப்பட்டதாக சொல்கிறாா்கள். ஐந்து முறை நீா்வளத்துறை மூலம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதிமுக ஆட்சியில்தான் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டது என்றாா் அவா்.