முகப்பு
திருநெல்வேலி

இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள் ஆகியோா் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 11 டிசம்பர், 2024 at 10:33 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண், திருமணமாகாத மகள் ஆகியோா் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் மூன்று மாத காலம் தையல் பயிற்சி முடித்து உரிய சான்று பெற்றுள்ள முன்னாள் படைவீரரின் மனைவி, கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் அவா்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற முன்னாள் படைவீரா் பிறப்பால் தமிழ்நாட்டை சோ்ந்தவராக இருத்தல் வேண்டும். படைவிலகல் சான்றில் தையல் இயந்திரம் கோரும் பயனாளியின் பெயா் பதிவு செய்யப்பட்டிருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களின் வாயிலாக இலவச தையல் இயந்திரம் பெற்றவராக இருத்தல் கூடாது. பயனாளியின் அதிகபட்ச வயது 40-க்குள் இருக்க வேண்டும். முன்னாள் படைவீரரின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவா் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு திருநெல்வேலி மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணிலோ (0462-2901440) தொடா்பு கொள்ளலாம்.